வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் இப்பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.
நல்வழி முற்றிற்று.
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. |
நூல்
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். |
1 |
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. |
2 |
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. |
3 |
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. |
4 |
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். |
5 |
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. |
6 |
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. |
7 |
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். |
8 |
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. |
9 |
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம் "நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும் எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். |
10 |
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது. |
11 |
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம் உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. |
12 |
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய் அம்புவி அதன் மேல். |
13 |
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும். |
14 |
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். |
15 |
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. |
16 |
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்! |
17 |
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். |
18 |
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். |
19 |
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி வறுமைக்கு வித்தாய் விடும். |
20 |
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான். |
21 |
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்? |
22 |
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. |
23 |
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே மடக்கொடி இல்லா மனை. |
24 |
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. |
25 |
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம். |
26 |
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். |
27 |
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். |
28 |
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். |
29 |
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. |
30 |
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. |
31 |
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. |
32 |
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். |
33 |
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். |
34 |
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. |
35 |
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம். |
36 |
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. |
37 |
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். |
38 |
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. |
39 |
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர். |
40 |
நல்வழி முற்றிற்று.
No comments:
Post a Comment